Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி – நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இதைதொடர்ந்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களிமிறங்கியது. இதில், முதலில் விளையாடிய கான்வாய் மற்றும் ரவீந்திரா ஆகியோர் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் மிட்செல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

வில்லியம்சன் அரை சதம் அடித்து 69வது ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் சதம் அடித்து 134 ரன்களில் அவுட்டானார். முன்னதாக, லதம் டக் அவுட் ஆனார். பிலிப்ஸ் 41 ரன்களிலும், சாப்மான் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 45.2 ஓவர் முடிவுக்கு நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. 28 பந்துக்கு 92 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் நியூலாந்து அணி இருந்தது.

மிட்செல் சான்ட்னர் மற்றும் சௌதீ ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில், மிச்செல் சான்ட்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, சௌதீயுடன் போல்ட் ஜோடி சேர்ந்தார். பெர்குசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இதன்மூலம், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.

4 -வது முறையாக இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தகுதிப் பெற்றது.