Tamilவிளையாட்டு

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம்!

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடினார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி ரூ.46 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாட்ரிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது ரொனால்டோ வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி மாட்ரிட் கோர்ட்டில் நேரில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபராத தொகையை கட்ட சம்மதம் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதமும், 23 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தார். ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை. இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *