Tamilசெய்திகள்

புதுச்சேரி பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நோ பேக் டே’

புதுச்சேரி பள்ளிகளில் கைவேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாதத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு ‘நோ பேக் டே’ அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் அந்த மாநில பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் ‘நோ பேக் டே’ என்ற பெயரில் புத்தக பை இல்லாத தினமாக மாதத்தில் ஒருநாளை அறிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம். அதேபோல் புதுச்சேரியிலும் மாதத்தில் ஒருநாள் பள்ளி மாணவர்களுக்கும் புத்தக பை இல்லாத தினத்தை கடைபிடிக்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

அந்நாளில் கை வேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை வழங்குதல், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல், டிஜிட்டல் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்.

மாணவர்களுக்கான மதிய உணவில் வாரத்தில் 2 நாட்களாவது சிறு தானிய உணவு வழங்க வேண்டும். நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் வல்லுநர்களை கொண்டு சிறப்பாக நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதை உடனே ஆய்வு செய்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிப்பைத் தொடர முடியாமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிக்கு வர ஊக்கப்படுத்த வேண்டும் அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளில் முதல் இடங்களை பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து மாணவர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.