Tamilசெய்திகள்

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

சென்னை கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெறும் ‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 13,000 கிலோ கஞ்சா முதலமைச்சர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது. போதைப்பொருள் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தனி மனிதர் வாழ்க்கையில் மட்டுமில்லை, மாநில வளர்ச்சியையும் போதைப்பொருட்கள் பாதிக்கும். போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெரும் சுமை. போதைப்பொருள் விற்பனையாளர்கள், கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒரு சில மாநிலங்களை போல் மோசமான நிலைமை தமிழகத்தில் இல்லை. பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருட்கள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டது. போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லை மாவட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும். போதைப்பொருட்களுக்கு எதிராக அனைத்து துறைகளும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.