Tamilசெய்திகள்

விஜய் பிரசாரத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் – புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதையொட்டி கட்சியின் தலைவர் விஜய் பொன்னேரி, வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 20) வாகனப் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்திற்கு பொதுமக்கள் நேரில் வரவேண்டாம் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் 20.04.2026 திங்கள்கிழமை திருவள்ளூர் மாவட்டத்திலும் சென்னையிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டியில் முற்பகல் 11.30 மணி முதல், விஜய் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிற்பகல் 3 மணி முதல் வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி வழியாக வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் விஜய் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடை பிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவ, மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.