Tamilசினிமா

‘மாமன்னன்’ படம் குறித்த கேள்வி – காட்டமாக பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாமன்னன் படம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, “நாட்டில் விலைவாசி ஏறிப்போச்சு. மாமன்னன் படம் ஓடுனா என்ன, ஓடலனா என்ன? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை? இதுவா வயிற்று பசியை போக்க போகுது? என்று தெரிவித்தார்.